சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
3.104
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
விண் கொண்ட தூ மதி பண் - பழம்பஞ்சுரம் (பரிதிநியமம் (பருத்தியப்பர்கோவில்) பருதியப்பர் மங்களநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=b1mpUxUA-C0 |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.104  
விண் கொண்ட தூ மதி
பண் - பழம்பஞ்சுரம் (திருத்தலம் பரிதிநியமம் (பருத்தியப்பர்கோவில்) ; (திருத்தலம் அருள்தரு மங்களநாயகியம்மை உடனுறை அருள்மிகு பருதியப்பர் திருவடிகள் போற்றி )
விண் கொண்ட தூ மதி சூடி நீடு விரி புன்சடை தாழ, பெண் கொண்ட மார்பில் வெண்நீறு பூசி, பேண் ஆர் பலி தேர்ந்து, கண் கொண்ட சாயலொடு ஏர் கவர்ந்த கள்வர்க்கு இடம்போலும் பண் கொண்ட வண்டு இனம் பாடி ஆடும் பரிதி(ந்) நியமமே. | [1] |
அரவு ஒலி, வில் ஒலி, அம்பின் ஒலி, அடங்கார் புரம் மூன்றும் நிரவ வல்லார், நிமிர் புன்சடைமேல் நிரம்பா மதி சூடி, இரவு இல் புகுந்து, என் எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம்போலும் பரவ வல்லார் வினை பாழ்படுக்கும் பரிதி(ந்) நியமமே. | [2] |
வாள்முக, வார்குழல், வாள்நெடுங்கண், வளைத் தோள், மாது அஞ்ச, நீள் முகம் ஆகிய பைங்களிற்றின் உரி மேல் நிகழ்வித்து, நாண் முகம் காட்டி, நலம் கவர்ந்த நாதர்க்கு இடம்போலும் பாண் முக வண்டு இனம் பாடி ஆடும் பரிதி(ந்) நியமமே. | [3] |
வெஞ்சுரம் சேர் விளையாடல் பேணி, விரிபுன்சடை தாழ, துஞ்சு இருள் மாலையும் நண்பகலும், துணையார், பலி தேர்ந்து, அம் சுரும்பு ஆர் குழல் சோர, உள்ளம் கவர்ந்தார்க்கு இடம்போலும் பஞ்சுரம் பாடி வண்டு யாழ்முரலும் பரிதி(ந்) நியமமே. | [4] |
நீர் புல்கு புன்சடை நின்று இலங்க, நெடு வெண்மதி சூடி, தார் புல்கு மார்பில் வெண் நீறு அணிந்து, தலை ஆர் பலி தேர்வார் ஏர் புல்கு சாயல் எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம்போலும் பார் புல்கு தொல்புகழால் விளங்கும் பரிதி(ந்) நியமமே. | [5] |
வெங்கடுங் காட்டு அகத்து ஆடல் பேணி, விரிபுன்சடை தாழ, திங்கள் திருமுடி மேல் விளங்க, திசை ஆர் பலி தேர்வார் சங்கொடு சாயல் எழில் கவர்ந்த சைவர்க்கு இடம்போலும் பைங்கொடி முல்லை படர் புறவின் பரிதி(ந்)நியமமே. | [6] |
பிறை வளர் செஞ்சடை பின் தயங்க, பெரிய மழு ஏந்தி, மறை ஒலி பாடி, வெண் நீறு பூசி, மனைகள் பலி தேர்வார் இறை வளை சோர எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம்போலும் பறை ஒலி சங்கு ஒலியால் விளங்கும் பரிதி(ந்) நியமமே. | [7] |
ஆசு அடை வானவர் தானவரோடு அடியார் அமர்ந்து ஏத்த, மாசு அடையாத வெண் நீறு பூசி, மனைகள் பலி தேர்வார் காசு அடை மேகலை சோர உள்ளம் கவர்ந்தார்க்கு இடம்போலும் பாசடைத் தாமரை வைகு பொய்கைப் பரிதி(ந்) நியமமே. | [8] |
நாடினர் காண்கிலர் நான்முகனும் திருமால் நயந்து ஏத்த, கூடலர் ஆடலர் ஆகி, நாளும் குழகர் பலி தேர்வார் ஏடு அலர் சோர எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம்போலும் பாடலர் ஆடலராய் வணங்கும் பரிதி(ந்) நியமமே. | [9] |
கல் வளர் ஆடையர், கையில் உண்ணும் கழுக்கள், இழுக்கு ஆன சொல் வளம் ஆக நினைக்க வேண்டா; சுடு நீறு அது ஆடி, நல் வளை சோர நலம் கவர்ந்த நாதர்க்கு இடம்போலும் பல் வளர் முல்லை அம் கொல்லை வேலிப் பரிதி(ந்) நியமமே. | [10] |
பை அரவம் விரி காந்தள் விம்மு பரிதி(ந்) நியமத்துத் தையல் ஒர்பாகம் அமர்ந்தவனைத் தமிழ் ஞானசம்பந்தன் பொய் இலி மாலை புனைந்த பத்தும் பரவிப் புகழ்ந்து ஏத்த, ஐயுறவு இல்லை, பிறப்பு அறுத்தல்; அவலம் அடையாவே. | [11] |